அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
ADDED : பிப் 16, 2026 12:06 AM

கலிபோர்னியா: அமெரிக்காவில் மாயமானதாக தேடப்பட்டு வந்த இந்திய மாணவர், ஆறு நாட்களுக்கு பின் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பெர்க்லி நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவில், கர்நாடக மாநிலம் துமகுருவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசய்யா, 22, என்ற மாணவர் வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் முதுநிலைப் படிப்பு படித்து வந்தார்.
இவர், சென்னை ஐ.ஐ.டி., யின் முன்னாள் மாணவர். சாகேத்தை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என, சக நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை பெர்க்லி மலை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் இருந்து போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
அப்பகுதிகளில் ட்ரோன்கள், நீர்மூழ்கி வீரர்கள், சோனார் கருவிகள் வாயிலாக, கடந்த ஐந்து நாட்களாக தேடுதல் தொடர்ந்த நிலையில், நேற்று முன்தினம் டில்டென் பூங்காவில் உள்ள ஆன்சா ஏரியில் சாகேத், சடலமாக மீட்கப்பட்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில வாரங்களாக சாகேத் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் கூறியதாக தெரிய வந்துள்ளது. ஆகையால், இது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துாதரகம், சாகேத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள், கர்நாடக அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது-.

