கனமழையால் இந்தியா - ஆஸி., முதல் டி20 ஆட்டம் பாதியில் ரத்து
கனமழையால் இந்தியா - ஆஸி., முதல் டி20 ஆட்டம் பாதியில் ரத்து
ADDED : அக் 29, 2025 05:58 PM

கான்பெரா: தொடர் கனமழை காரணமாக இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பாதியில் கைவிடப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கான்பெராவில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கமான பாணியில் அதிரடி ஆட்டத்துடன் தொடங்கிய அபிஷேக் ஷர்மா 19 ரன்னில், ஆஸி., பவுலர் எல்லிஸ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகு, களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், கில்லுடன் சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனிடையே, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து பேட் செய்த கில், சூர்யகுமார் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. 9.4 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன் எடுத்திருந்த போது, மழையினால் மீண்டும் ஆட்டம் தடைபட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் மேற்கொண்டு ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் உருவானது. எனவே, போட்டி முடிவின்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கில் 37 ரன்னுடனும், சூர்யகுமார் யாதவ் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி அக்.,31ம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.

