டிச., 21 சர்வதேச தியான தினம்: இந்தியா கோரிக்கை ஐ.நா., ஏற்பு
டிச., 21 சர்வதேச தியான தினம்: இந்தியா கோரிக்கை ஐ.நா., ஏற்பு
ADDED : டிச 08, 2024 12:26 AM

நியூயார்க்: இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, டிச., 21ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க, ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
கடந்த 2014ல், இந்தியாவின் முயற்சியைஏற்று, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கும் அறிவிப்பை ஐ.நா., வெளியிட்டது.
இந்நிலையில், டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, ஐ.நா., பொது சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதையடுத்து, இனி, டிச., 21ம் தேதி உலகெங்கும், சர்வதேச தியான தினமாக அனுசரிக்கப்பட உள்ளது.
இதை, ஐ.நா.,வுக்கான இந்திய குழுவின் துாதர் பர்வதனேனி ஹரீஷ், சமூக வலைதளத்தில் நேற்று அறிவித்துள்ளார்.
'உலகமே ஒரு குடும்பம் எனப்படும் வசுதைவ குடும்பகம் என்பது இந்தியாவின் கோட்பாடு. உலக மக்களின் உடல் மற்றும் மன நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. இதை உணர்த்தும் வகையிலே, மனநலன் மற்றும் அமைதியை ஏற்படுத்தும் தியானத்தை, சர்வதேச தினமாக கொண்டாட தீர்மானம் கொண்டு வரப்பட்டது' என அவர் கூறியுள்ளார்.