மலேசியாவில் மாணவர்கள் 6 ஆயிரம் பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்; பள்ளிகள் மூடல்
மலேசியாவில் மாணவர்கள் 6 ஆயிரம் பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்; பள்ளிகள் மூடல்
ADDED : அக் 14, 2025 12:17 PM

கோலாலம்பூர்: மலேசியாவில் மாணவர்கள் 6 ஆயிரம் பேர் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
மலேசியாவில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் காய்ச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
கடந்த வாரம் மட்டுமே 97 பேர் இன்புளுன்யசா காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறி இருந்தது.
இந் நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் மலேசியாவில் 6000 பள்ளி மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மழலையர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவர். இதையடுத்து, சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கை கருதி பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் முகமது அஹமது கூறியதாவது; கோவிட் 19 தொற்றுக்காலத்தில் இருந்து இதுபோன்ற இன்புளுயன்சா காய்ச்சலை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் இருக்கிறது. தற்போது 6000 பள்ளி மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளில் முகக்கவசம் அணிந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். எங்கும் குழுவாக இருந்து நோய் தொற்றுகளை பரப்பக்கூடாது என்றும் கூறி இருக்கிறோம்.
இவ்வாறு முகமது அஹமது கூறியுள்ளார்.