வரும் 21ல் சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி
வரும் 21ல் சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி
ADDED : டிச 18, 2025 06:27 AM

நியூயார்க்: சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இதை ஏகமனதாக ஏற்ற ஐ.நா., சபை டிசம்பர் 21 ஆண்டுதோறும் உலக தியான நாளாக அனுசரிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, வரும் 21ம் தேதி இரண்டாவது முறையாக உலகம் முழுதும் தியான தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, 100 நாடுகளில் மொத்தம் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அதாவது, உலகின் வெவ்வேறு நேரங்களின்படி, இந்த நிகழ்ச்சி, 33 மணி நேரமாக நடைபெறும். நியூசிலாந்து நேரப்படி காலை 8:00 மணிக்கு துவங்கி, அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு நாட்டிலும், தலா, 20 நிமிடங்களுக்கு தியான நிகழ்ச்சி நடக்கும்.

