ADDED : பிப் 15, 2026 01:33 PM

டெஹ்ரான்: டிரம்பின் மிகவும் அதிர்ச்சிகரமான எச்சரிக்கைக்குப் பிறகு, ''சமரசம் செய்யத் தயாராக உள்ளோம்'' என நிபந்தனைகளுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி தெரிவித்து உள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. ஈரானை எப்படியாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க வேண்டும் என அமெரிக்கா பல்வேறு எச்சரிக்கைகளையும், அழுத்தங்களையும் கொடுத்து வருகிறது. மேற்காசியாவில் போரை தவிர்க்க இரு நாடுகளும் பேச்சு நடத்தவேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து அணுசக்தி தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்; ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சு மூலம் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு அது மிக மோசமான நாளாக அமையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சமரசம் செய்ய ஈரான் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி கூறியதாவது: அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்க சமரசம் செய்ய ஈரான் தயாராக உள்ளது. ஆனால் அமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்குவது பற்றி பேச தயாராக இருந்தால் மட்டுமே சாத்தியம். அமெரிக்காவின் நீதிமன்றத்தில் அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
அவர்கள் உண்மையாக இருந்தால், நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஈரானிடம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

