ஈரான் போர் எதிரொலி; துபாயில் பாதியாக குறைந்தது சொகுசு ஹோட்டல் அறை வாடகை
ஈரான் போர் எதிரொலி; துபாயில் பாதியாக குறைந்தது சொகுசு ஹோட்டல் அறை வாடகை
UPDATED : மார் 11, 2026 10:13 PM
ADDED : மார் 11, 2026 09:33 PM

துபாய்: ஈரான் போர் காரணமாக உலகின் மிகப்பெரிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் துபாய், பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் -இஸ்ரேல் கூட்டணியின் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் வீசிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் காரணமாக மேற்காசிய நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் துபாய் சர்வதேச விமான நிலையம் உட்பட பல இடங்கள் பாதிக்கப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பயண பாதுகாப்பு அச்சம், விமான போக்குவரத்து இடையூறு, ஏவுகணை தாக்குதல்கள் பகுதியில் தீ விபத்துகள் உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய மற்றும் ஆசிய பயணியர் தங்கள் பயண திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.
ஏராளமானோர் ஹோட்டல் முன்பதிவுகளை ரத்து செய்து வருகின்றனர். இதனால் துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல்களின் அறைகளுக்கான வாடகை கடுமையாக சரிந்துள்ளன. சில ஹோட்டல்களில் அறைக்கான வாடகை, 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.
ஆடம்பர ஹோட்டல்கள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கொண்ட பாம் ஜுமைராவில், 3 இரவுகளுக்கு மேலான அறை வாடகை, ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 65,000 ரூபாயாக குறைந்துள்ளது. சில ஹோட்டல்களில் ஒரு இரவு வாடகையை, 6,300 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

