கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
UPDATED : ஜன 11, 2026 07:37 PM
ADDED : ஜன 11, 2026 06:56 PM

டெஹ்ரான்: '' அமெரிக்காவும், இஸ்ரேலும் கலவரத்தை தூண்டி விடுகின்றன. அதற்கு மக்கள் அடிபணியக்கூடாது,'' என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: மக்களின் கவலைகளை கேட்பது அரசின் கடமை. ஆனால், நாட்டை பாதுகாப்பது மிகப்பெரிய பொறுப்பு. ஈரானை அழிக்க கலவரக்காரர்கள் முயற்சி செய்கின்றனர்.மக்களுக்கு கவலைகள் உள்ளன.அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். அது நமது கடமை.
பயங்கரவாதிகளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் வழிபாட்டு தலங்களுக்கு தீவைக்கின்றனர். மக்களை தீவைத்து கொல்கின்றனர். அவர்கள் இந்நாட்டு மக்கள் அல்ல. இந்நாட்டை சேர்ந்தவர்கள் போராடினால் அவர்களின் குறைகளை கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு தீர்வு காண தயார். அப்பாவி மக்களை கொல்வதை ஏற்க முடியாது. கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என அப்பாவி மக்களை கேட்டுக் கொல்கிறேன்.
கலவரக்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டளைகளுக்கு இளைஞர்கள் செவி சாய்க்கக்கூடாது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கலவரத்தை தூண்டிவிடுகின்றன. நமது நாட்டை தாக்கி இளைஞர்களையும்,குழந்தைகளையும் கொன்றவர்கள், 'தற்போது இந்த மக்களிடம் நாங்கள் இங்கு இருக்கிறோம். ஈரானை அழியுங்கள். உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம்,' என்கின்றனர். அவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும்.
ஈரான் சமூகத்தை சீர்குலைக்க மக்களை அனுமதிக்கக்கூடாது. நாங்கள் நீதியை நிலைநாட்ட விரும்புகிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

