ADDED : மார் 02, 2026 05:42 AM

டெஹ்ரான்: ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பான ஐ.ஆர்.ஜி.சி., எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் புதிய தளபதியாக மூத்த ராணுவ அதிகாரியான பிரிகேடியர் அகமது வஹிதி, 67, நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானில் தனி ராணுவ அமைப்பாக திகழும் ஐ.ஆர்.ஜி.சி., உள்நாட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு துாணாக உள்ளது. இதுதவிர, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆயுதங்களையும் பயன்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது.
இதேபோல் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹவுதி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவளித்து பயிற்சி மற்றும் ஆயுதங்களையும் இந்த அமைப்பு சப்ளை செய்து வருகிறது.
இதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஐ.ஆர்.ஜி.சி.,யை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
ஈரான் - ஈராக் போரில், இந்த அமைப்பு முக்கிய பங்காற்றிய நிலையில், ஈரான் ராணுவத்தைவிட கூடுதல் அதிகாரம் படைத்ததாகவும் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஐ.ஆர்.ஜி.சி., அமைப்பின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அந்த அமைப்பின் புதிய தலைவராக பிரிகேடியர் அகமது வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானின் உள்துறை அமைச்சராகவும், பாது காப்பு துணை அமைச்சராகவும் இருந்த நிலையில், கடந்த டிசம்பரில் ஐ.ஆர்.ஜி.சி.,யின் துணை தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பின் விமானப்படை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ள வஹிதி, தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா உள்ளிட்டவை தடை விதித்துள்ளன.

