ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணம்; 40 நாட்கள் துக்கம் அறிவிப்பு
ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணம்; 40 நாட்கள் துக்கம் அறிவிப்பு
UPDATED : மார் 02, 2026 12:33 AM
ADDED : மார் 01, 2026 06:04 AM

நியூயார்க்: ஈரான் ஆட்சியாளர் கமேனி போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை முதலில் மறுத்த ஈரான், பிறகு ஒப்புக் கொண்டுள்ளது. கமேனி மறைவுக்கு 40 நாள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது.
ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனி வசிக்கும் மாளிகை மீது நேற்று அமெரிக்க ராணுவமும் இஸ்ரேல் ராணுவமும் குண்டு மழை பொழிந்தன. அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது அறிவித்தனர்.கமேனி கொல்லப்பட்டதை முதலில் மறுத்த ஈரான், பிறகு அதை ஒப்புக் கொண்டுள்ளது.
அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: வரலாற்றின் மிகவும் மோசமான தீய மனிதரான கமேனி கொல்லப்பட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல; கமேனியின் ரத்த வெறி பிடித்த கும்பலால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள், பல்வேறு நாட்டு மக்களுக்கு கிடைத்த நீதியாகும்.
அவரால் எங்களது துல்லியமான தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
தங்கள் நாட்டை கையில் எடுத்துக் கொள்வதற்கு ஈரான் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு இது.
ஈரான் நாட்டின் ராணுவம், போலீசார், சிறப்பு காவல் படையினர் என பலரும் எங்களிடம் இருந்து பாதுகாப்பை எதிர்நோக்கி உள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. அவர்கள் ஈரானிய தேசபக்தர்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
மீண்டும் தங்கள் நாட்டை பழைய பெருமைக்கு கொண்டு வர முன் வருவார்கள் என்றும் நம்புகிறேன். அதற்கான நடவடிக்கை விரைவில் துவங்கும்.
கமேனி கொல்லப்பட்டாலும் ஈரான் மீதான துல்லிய தாக்குதல் இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும். உலகத்துக்கும் மத்திய கிழக்கு பகுதிக்கும் அமைதியை கொண்டு வரும் எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை இந்த தாக்குதல் தொடரும். இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துக்கம் அனுசரிப்பு
இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஆட்சியாளர் கமேனி மரணம் அடைந்தார் என்பதை ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கமேனியின் மகள், மருமகன், பேரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

