ADDED : செப் 26, 2024 01:29 AM

மாஸ்கோ :உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தன் ராணுவத் தளபதிகளுடன் மிகவும் ரகசியமான கூட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதன்படி, பிரிட்டன், 'ஸ்டார்ம் ஷேடோ' என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கிஉள்ளது.
உள்நாட்டில் எதிரிப் படைகளுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருந்தது.
ரஷ்யாவுக்குள் செலுத்தி தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் சமீபத்தில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பின்போது, இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒருவேளை உக்ரைன் இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, ராணுவத் தளபதிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதத்தை பயன்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன.
இதில், ரஷ்யாவிடம் மட்டும், 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

