ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல்; அலறிய பாகிஸ்தான் பயங்கரவாதி
ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல்; அலறிய பாகிஸ்தான் பயங்கரவாதி
ADDED : ஜன 16, 2026 06:53 AM

இஸ்லாமாபாத்: ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதை லஷ்கர் இ தொய்பா தளபதி ஹபீஸ் அப்துர் ரவூப் ஒப்புக்கொண்டுள்ளான்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தை கேட்டு, 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பதிலடியாக, மே 6 மற்றும் 7ம் தேதிகளில் இந்திய ராணுவத்தினர், ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் பயங்கரமான தாக்குதலை நடத்தினர். இதில், பயங்கரவாத அமைப்புகளின் கூடாரங்கள் மற்றும் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் சேதப்படுத்தப்பட்டன.
முதலில் இந்தத் தாக்குதலால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று காட்டிக் கொண்ட பாகிஸ்தான், பின்னர் மெல்ல மெல்ல தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில், இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தளபதி ஹபீஸ் அப்துர் ரவூப் ஒப்புக்கொண்டுள்ளான்.
அண்மையில் ஒரு கூட்டத்தில் அவன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் அவன் பேசியதாவது; மே 6 மற்றும் 7 தேதிகளில் முரிட்கேவில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அது ஒரு பெரிய தாக்குதல். இந்தத் தாக்குதலின் போது, குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. நிலைமையை அறிந்து குழந்தைகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு எங்கள் ஆதரவாளர்கள் கூறினர். பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் தாக்கப்பட்டதாக மோடி கூறினார். ஆனால் உண்மையில் பாகிஸ்தான் தாக்கப்பட்டது. போரின் விதிகள் மாறிவிட்டன. இந்த தாக்குதலில் நம் அனைவருக்கும் பயங்கர சேதம் ஏற்பட்டது உண்மை. இவ்வாறு அவன் பேசியுள்ளான்.
அண்மையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தின. அப்போது, பாகிஸ்தான் ஏதாவது செய்ய முயன்றால், தக்க பதிலடி கொடுப்போம் என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

