ADDED : பிப் 05, 2026 04:34 AM

நியூயார்க்: இந்தியா, - அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, அமெரிக்க நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்களை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேசினர். இதைத் தொடர்ந்து, நம் நாட்டிற்கு விதித்திருந்த 50 சதவீத இறக்குமதி வரியை, 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் எரிசக்தி, அணு மின்சக்தி, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'இரு தரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து பேசினோம்.
'மேலும் இந்திய - அமெரிக்க பொருளாதார கூட்டாண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து திருப்திகரமான விவாதம் நடந்தது' என தெரிவித்து உள்ளார்.

