ஆம், நான் ஒரு குற்றவாளி தான்: வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டார் பைடன் மகன் ஹன்டர்
ஆம், நான் ஒரு குற்றவாளி தான்: வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டார் பைடன் மகன் ஹன்டர்
UPDATED : செப் 06, 2024 09:18 AM
ADDED : செப் 06, 2024 09:13 AM

வாஷிங்டன்: 1.4 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு வழக்கில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹன்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கா அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் உள்ளார். இவரது மகன் ஹன்டர் பைடன், 52. இவர் மீது கடந்த 2019ம் ஆண்டு, வருமான வரி ஏய்ப்பு செய்தது, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வருமான வரி
டெலாவேர் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர் டேவிட் சார்லஸ் வெயிஸ், 'ஹன்டர் பைடன் மீது 3 குற்ற வழக்குகள் உள்ளன. 1.4 மில்லியன் டாலர் வரை வருமான வரி செலுத்தத் தவறிவிட்டார். பல ஆண்டுகளாக தவறான வரிக் கணக்குகளை சமர்ப்பித்துள்ளார்' என குற்றம்சாட்டினார்.
குற்றப்பத்திரிகை
குற்றப்பத்திரிகையில், 'ஹன்டர் தனது வரிக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்துள்ளார். 2015ல் வரிகளை செலுத்துவதை நிறுத்திவிட்டார்' என தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
தவறு செய்தேன்!
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 16ம் தேதி நீதிபதி மார்க் ஸ்கார்சி 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 450,000 டாலர் அபாரதம் விதித்து தீர்ப்பு அளித்தார். தற்போது வரை ஹன்டர் பிணையில் சுதந்திரமாக இருக்கிறார். இந்நிலையில், 1.4 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு வழக்கில், ஜோ பைடன் மகன் ஹன்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் ஹன்டர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தனது குடும்பத்தை ஒரு விசாரணையில் இருந்து காப்பாற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டேன்' என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே அதிபர் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு விசாரணை மேலும் இழுத்தடித்தால், தன் தந்தை சார்ந்துள்ள கட்சி வேட்பாளருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரில் ஒருவரை நவம்பர் 5ம் தேதி வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள். பைடன் தனது சக ஜனநாயகக் கட்சியினரின் அழுத்தம் காரணமாக ஜூலை மாதம் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.