கனடா-இந்திய அரசியல் உறவுகளை ட்ரூடோ சிதைத்துவிட்டார்: இந்திய தூதர் வர்மா சரமாரி குற்றச்சாட்டு
கனடா-இந்திய அரசியல் உறவுகளை ட்ரூடோ சிதைத்துவிட்டார்: இந்திய தூதர் வர்மா சரமாரி குற்றச்சாட்டு
UPDATED : அக் 21, 2024 08:20 AM
ADDED : அக் 21, 2024 07:35 AM

புதுடில்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதாக கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் நேரடியாக குற்றம் சாட்டியதால் இருநாடுகளுக்கு இடையிலான உறவு சீர்கெட்டு உள்ளது. இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்து உள்ளனர் என்றும் கனடா குற்றம் சாட்டியது.
கனடாவில் உள்ள இந்திய தூதர் உட்பட 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா அளித்த பேட்டி:
ஆதாரங்களை முதலில் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஆனால் ஒருவர் (ட்ரூடோ) பார்லிமென்டில் நின்று ஒரு விஷயத்தைப் பற்றி பேச முடிவு செய்தார். உறுதியான ஆதாரம் இல்லை என்று அவரே கூறியுள்ளார்.
உளவுத்துறையின் அடிப்படையில், நீங்கள் ஒரு உறவை அழிக்க விரும்புகிறீர்கள். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை சிதைத்துவிட்டார். கனடாவில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் காலிஸ்தானுக்கு ஆதரவானவர்கள். இந்தியாவுக்கு எதிரானவர்கள்.
கனடாவில் அரசியல்வாதிகள் மிகவும் புதியவர்களாக இருப்பதால், சர்வதேச உறவுகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, எந்தப் பகுதியிலும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ கூறியது ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

