ஏமன் சிறையில் கேரள நர்சுக்கு மரண தண்டனை: தேதி அறிவித்ததால் அதிர்ச்சி; காப்பாற்ற இறுதி கட்ட முயற்சி
ஏமன் சிறையில் கேரள நர்சுக்கு மரண தண்டனை: தேதி அறிவித்ததால் அதிர்ச்சி; காப்பாற்ற இறுதி கட்ட முயற்சி
ADDED : ஜூலை 08, 2025 07:07 PM

சனா: ஏமன் நாட்டவரை கொலை செய்த வழக்கில் சிக்கி உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை.
கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பிரியாவின் தாய் மகளை மீட்க போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி ( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வரும் 16 ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.இதனை நிமிஷா தாயாரின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்த சாமுவேல் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: நேற்று, சிறைத்துறை தலைவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவு வந்துவிட்டதாக தெரிவித்தார். இது அவரிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது. தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து மத்திய வெளியுறவத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் பேச்சு நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேவையான நிதி திரட்ட முயற்சிகள் மேற்கொண்டோம் எனத்தெரிவித்தார்.