ஹிந்து கோவில் ஆண்டு விழா: பிரிட்டன் மன்னர் வழிபாடு
ஹிந்து கோவில் ஆண்டு விழா: பிரிட்டன் மன்னர் வழிபாடு
ADDED : அக் 30, 2025 09:52 PM

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவி ராணி கமிலாவுடன் லண்டனில் உள்ள புகழ்பெற்ற, ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் 30ம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.
ஐரோப்பாவின் முதல் பாரம்பரிய ஹிந்து கோவிலான ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. பிரிட்டனின் நீஸ்டனில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மிக மற்றும் கலாசார அடையாளமாக திகழ்கிறது.
கோவிலின் 30ம் ஆண்டு விழாவையொட்டி பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா வருகை தந்தனர். ஹிந்து புனிதத்தை கடைப்பிடித்து காலணிகளை கழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குச் சென்ற இருவருக்கும், மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
கோவிலில் வழிபட்ட அவர்கள், கோவிலை நிர்வகிக்கும் பி.ஏ.பி.எஸ்., எனப்படும் போச்சசன்வாசி அக் ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற அறக்கட்டளையின் செயல்பாடுகளை பாராட்டினர்.அப்போது பிரான்சின் பாரிஸ் நகரில், அடுத்தாண்டு செப்டம்பரில் திறக்கப்பட உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் குறித்தும் அரச தம்பதியினருக்கு விளக்கப்பட்டது.

