ADDED : நவ 29, 2011 03:20 AM
குவைத்: குவைத் நாட்டில் பிரதமர் மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஊழல் புகார்கூறியதை தொடர்ந்து , அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்யப்பட்டது.
வளைகுடா நாடான குவைத் நாட்டின் பிரதமராக ஷேக்-நஸீர் முகமது அல்- அகமது ஷபா,71 உள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு , குவைத் மன்னரின் சிபாரிசினால் பிரதமர் பதவியை பிடித்தார் அது முதல் குவைத் அரசியலில் சிக்கல் வலுப்பெற்று வந்தது.
இந்நிலையில், பிரதமர் , ஊழல் மூலம் அரசுப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புகார் தெரிவித்து நேற்று மெகா பேரணி நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலை சமாளிக்க மன்னர் ஷேக்-ஷபா அல்-அகமது அல்-ஷபா , உயரதிகாரிகளின் அவசரக்கூட்ட்தை கூட்டினார். பின்னர் பிரதமர் பதவியிலிருந்து நஸீர் முகமது உடனடியாக விலமாறும், பின்னர் அமைச்சரவை ராஜினாமா செய்யுமாறும் பாராளுமன்றத்தை கலைக்குமாறும் உத்தரவிட்டார்.
இதனை முக்கிய எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். பொதுத்தேர்தல் நடக்கும் வரை பாராளுமன்ற செயல்படும் எனவும் அந்த எம்.பி. கூறினார்.
