இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : டிச 22, 2024 07:03 AM
ADDED : டிச 21, 2024 08:07 PM

குவைத்: ''குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம், இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர்,'' என பிரதமர் மோடி பேசினார்.
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: குவைத் வந்ததில் இருந்து அரவணைப்பை என்னால் உணர முடிந்தது. இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு நான்கு மணி நேரங்களே ஆகும். ஆனால், இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருவதற்கு நான்கு தசாப்தம் ஆகி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளீர்கள். இங்கு அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது, மினிஇந்தியா கூடியுள்ளது போல் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இங்கு வருகின்றனர்.
குவைத் தலைவர்களிடம் பேசும்போது, அவர்கள் இந்திய சமூகத்தினரை புகழ்கின்றனர். உங்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் திறன் ஆகியவற்றை பார்த்து குவைத் குடிமக்கள் உங்கள் மீது பெரிய மரியாதை வைத்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் ' உலக தியான தினம்' கொண்டாடப்படுகிறது. இது இந்திய பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.வர்த்தகம் மற்றும் புதுமைகள் மூலம் ஊக்கத்தை தூண்டும் பொருளாதாரத்தை விரும்புகிறது. இந்தியாவும் புதுமையிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. புதிய குவைத்திற்கு தேவையான திறன், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மனித வளம் இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.