பயங்கரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவை தாக்கக்கூடும்; எச்சரிக்கும் ஆலோசகர்
பயங்கரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவை தாக்கக்கூடும்; எச்சரிக்கும் ஆலோசகர்
ADDED : ஜூலை 11, 2025 08:19 PM

காத்மாண்டு: லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவில் ஊடுருவி தாக்குதலை நடத்தலாம் என்று அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் சுனில் பகதூர் தாபா எச்சரித்துள்ளார்.
காத்மாண்டுவில் கல்வி நிறுவனம் ஒன்றில் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தெற்காசியாவில் நிலவும் பயங்கரவாத பிரச்னைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
இதில் நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பகதூர் தாபா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
இந்தியாவில் இருப்பது போன்றே பயங்கரவாத பிரச்னைகள் நேபாளத்திலும் எதிரொலிக்கின்றன. பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. சார்க் உறுப்பு நாடுகள் மற்றும் பரந்த பிராந்திய ஒருங்கிணைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவை தாக்கலாம். நேபாள நாட்டின் வழியை அவர்கள் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவும், நேபாளமும் 1751 கிமீ தூரம் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லையில் பாதுகாப்பு கெடுபிடிகள் என்பது சற்றே இலகுவான ஒன்று என கூறலாம்.
நேபாளம் வழியாக இந்தியாவில் பயங்கரவாதிகள் கால் பதிக்கலாம் என்பதற்கு கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை நினைவு கூரலாம்.
குறிப்பாக, 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டில்லி நோக்கி வந்த விமானம் அதில் ஆயுதங்களுடன் பயணித்தவர்களால் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. நேபாள விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடே கடத்தலுக்கு முக்கிய காரணியாகவும் அமைந்தது.