ADDED : செப் 19, 2024 01:00 AM
டாக்கா வங்கதேசத்தில் போராட்டங்கள் தொடரும் நிலையில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரமளித்து இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களை தொடர்ந்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு கடந்த மாதம் அமைக்கப்பட்டது. இருப்பினும் அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன; ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன.
போராட்டத்தின்போது நடந்த போலீசார் மீதான தாக்குதல் தற்போதும் தொடர்கிறது. இதனால், போலீஸ் அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், போராட்டங்களை கட்டுப்படுத்தவும், ராணுவ உயர் அதிகாரிகளுக்கு, மாஜிஸ்திரேட் அதிகாரம் அளித்து, இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, கைது செய்வது, சட்டவிரோத பேரணிகளை தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை ராணுவ உயர் அதிகாரிகள் மேற்கொள்ள முடியும்.
தற்காப்புக்காக துப்பாக்கியால் சுடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 60 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் என்றும், இடைக்கால அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

