பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 69 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 69 பேர் பலி
UPDATED : அக் 01, 2025 03:06 PM
ADDED : அக் 01, 2025 07:07 AM

மணிலா: பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ளது செபு நகரம். இங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நில அதிர்வை உணர்ந்து மக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வீதிகளுக்கு ஓடினர்.
மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலநடுக்கத்தில் அங்குள்ள சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் மொத்தம் 69 பேர் உடல்நசுங்கி உயிரிழந்து உள்ளனர்.
எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது தெரியாத நிலை உள்ளது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் இறங்கி உள்ளனர்.
நிலநடுக்கம் பதிவான செபு நகரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நிலநடுக்க பீதியில் உறைந்துள்ள அவர்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்து உள்ளனர்.
நில நடுக்கத்தின் பின்னூட்டங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரியவருவதால், மக்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நகர நிலநடுக்கவியல் மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.