வெளிநாட்டினர் வருகை கட்டாய பதிவு: அமெரிக்காவில் புதிய விதி அமல்
வெளிநாட்டினர் வருகை கட்டாய பதிவு: அமெரிக்காவில் புதிய விதி அமல்
ADDED : ஏப் 14, 2025 04:48 AM

வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர் அனைவரும் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரின் வருகையை பதிவு செய்வதற்காக, 'ஏலியன்' பதிவு சட்டம், 1940ல் உருவாக்கப்பட்டது. இதன்படி, அமெரிக்காவுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினரும் தங்கள் வருகையை பதிவு செய்து சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆவணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
காலப்போக்கில் இந்த நடைமுறை படிப்படியாக கைவிடப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டினர் தங்கள் வருகையை பதிவு செய்யும் நடைமுறையை அமெரிக்க அரசு மீண்டும் கட்டாயமாக்கி உள்ளது.
இதன்படி, கடந்த 11க்கு பின் அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் அங்கு, 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்குவதாக இருந்தால், 'ஜி325ஆர்' என்ற விண்ணப்பத்தை பெற்று தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு அவர்களது பெற்றோர் பதிவு செய்ய வேண்டும்.
இந்த வருகை பதிவை செய்ய தவறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என, அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது. அதே போல அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் வீட்டு முகவரி மாற்றத்தை 10 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை எனில், 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சிறுவர் - சிறுமியர், 14 வயதை கடந்தால் அவர்களது விபரங்கள் மற்றும் கை ரேகை பதிவுகளை, 30 நாட்களுக்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வேலை மற்றும் படிப்புக்கான விசா வைத்துள்ளோர், 'கிரீன் கார்டு' வைத்துள்ளோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக கருதப்படுவர். அவர்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அதே நேரம், அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.