மெக்கா வெப்ப அலை: இந்தியர்கள் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு
மெக்கா வெப்ப அலை: இந்தியர்கள் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு
ADDED : ஜூன் 21, 2024 11:05 PM

மெக்கா : மெக்காவில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணியரில் இந்தியர்கள் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புனித ஹஜ் யாத்திரைக்காக, இஸ்லாமிய மக்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள ‛‛மெக்கா'' மற்றும் ‛‛மதினா'' செல்வது வழக்கம். கடந்த 14ம் தேதி துவங்கிய இந்த புனித யாத்திரைக்காக இதுவரை அங்கு 20 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.
சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து மயங்கினர். இதில் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில், நேற்றுகடும் வெப்பத்தால் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது. இதில் 80 இந்தியர்கள் பலியானதாக செய்திகள் வெளியாயின.
இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மெக்காவில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. சில இந்தியர்களும் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.