ADDED : அக் 11, 2024 01:38 AM

டாம்பா,அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை ஒட்டியுள்ள மெக்சிகோ வளைகுடாவில் சமீபத்தில் 'மில்டன்' சூறாவளி உருவானது. இது நேற்று புளோரிடா மாகாணத்துக்குள் நுழைந்தது.
அப்போது பலத்த மழையுடன், மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் ஏராளமான கட்டடங்கள், வீடுகள் சேதமடைந்தன.
புளோரிடா மாகாணத்தில் 90 நிமிடங்கள் நீடித்த சூறாவளியால் முக்கிய நகரங்கள் இதுவரை காணாத கனமழையை ஒரே நாளில் சந்தித்தன. இதனால் நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சூறாவளியின் போது ஒரே நாளில் 47 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அனைத்து பெட்ரோல் நிலையங்களும் எரிபொருளின்றி மூடப்பட்டுள்ளன. புளோரிடாவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், 32 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மின்சார துறை தெரிவித்துள்ளது. நேற்று காலை சூறாவளியின் வேகம் மணிக்கு 135 கி.மீ., ஆக அதிகரித்து கேப் கெனவரல் வழியாக அட்லான்டிக் கடலுக்குள் நுழைந்தது.
சூறாவளி காரணமாக ஏற்பட்ட விபத்தில் புளோரிடாவில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

