டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு; பெருமை அடைகிறேன் என மோடி பதிவு
டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு; பெருமை அடைகிறேன் என மோடி பதிவு
ADDED : ஜூலை 04, 2025 10:19 PM

போர்ட் ஆப் ஸ்பெயின்: டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர், விருது பெறுவதில் பெருமை அடைகிறேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக, மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவுக்கு அவர் சென்றார். கடந்த 30 ஆண்டுகளில், கானாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
அங்கு, கானாவின் மிக உயரிய விருதான, 'தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா' என்ற விருதை அந்நாட்டு அதிபர் ஜான் டிரமணி மஹாமா வழங்கினார். அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. கானா நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி, இன்று கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டொபாகோவிற்கு சென்றார்.
அவர் அந்நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய, 'தி ஆர்டர் ஆப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது' வழங்கப்பட்டது. 'விருது பெற்றதில் பெருமை அடைகிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன்' என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.