டிரம்ப் அழைப்பை ஏற்க மறுத்தார் மோடி; ஜெர்மனி பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்
டிரம்ப் அழைப்பை ஏற்க மறுத்தார் மோடி; ஜெர்மனி பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்
ADDED : ஆக 26, 2025 06:07 PM

பெர்லின்: இந்தியப்பொருட்களுக்கு வரி விதித்த விவகாரம் மோதலாக மாறியுள்ள நிலையில், நான்கு முறை அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் பேச முயற்சித்தும், பிரதமர் மோடி ஏற்க மறுத்து விட்டார் என்று ஜெர்மனி நாட்டு பத்திரிகை பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். கூடுதலாக, அபராத வரி 25 சதவீதமும் விதித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அமெரிக்காவின் செயல், எந்த வகையிலும் நியாயமற்றது என்று கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம் என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதனால் கடந்த 25 ஆண்டுகளாக மேம்பட்டு வந்த இந்திய- அமெரிக்க நல்லுறவு சீர் கெட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் இருந்த நம்பிக்கை போன நிலையில், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அமைச்சர்களும் அதிகாரிகளும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம், இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, 'அமெரிக்க நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்' என்கிற உணர்வு ஏற்பட தொடங்கி இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய பிரதமர் மோடியிடம் பேச அதிபர் டிரம்ப் முயற்சித்தார். சமீப வாரங்களில் நான்கு முறை டிரம்ப் பேச முயற்சி மேற்கொண்டும், இந்திய பிரதமர் பேச மறுத்து விட்டார் என்று ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமரின் செயல், அமெரிக்க அதிபர் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை காட்டுவதாக உள்ளது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பெர்லின் நகரை தலைமையிடமாக கொண்ட குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தின் இயக்குனர் தார்ஸ்டன் பென்னரும் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.டிரம்ப், ஏற்கனவே வியட்நாம் அதிபருடன் போனில் அரைகுறையாக பேசி விட்டு, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமலேயே ஏற்பட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்தவர்.
அதே போன்ற சதி வலையில் தாமும் சிக்கி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபருடன் பேசாமல் தவிர்ப்பதாகவும், அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.