சர்ச்சை வரைபடத்துடன் நேபாள ரூபாய் நோட்டு சீன நிறுவனத்துக்கு ஒப்பந்தம்
சர்ச்சை வரைபடத்துடன் நேபாள ரூபாய் நோட்டு சீன நிறுவனத்துக்கு ஒப்பந்தம்
ADDED : அக் 31, 2024 11:59 PM

காத்மாண்டு : நம் நாட்டின் பகுதியை தன்னுடைய பகுதியாக காட்டும் சர்ச்சைக்குரிய வரைபடத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டை அச்சடிக்க நேபாளம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம், சீனாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்துடன், 1,850 கி.மீ., துார எல்லையை நாம் பகிர்ந்து கொள்கிறோம். சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த எல்லை அமைந்துள்ளது.
கடந்த, 2020, ஜூன் மாதத்தில், நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதில், உத்தரகண்டில் உள்ள லிபுலேக், காலாபாணி, லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்தின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக இந்த வரைபடம் திருத்தப்பட்டது.
இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. செயற்கையாக எல்லையை மாற்றும் இந்த முயற்சி செல்லாது என, மத்திய அரக தெரிவித்தது.
இந்நிலையில், நேபாள அரசு, புதிய, 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க உள்ளது. இந்த வகையில், 30 கோடி எண்ணிக்கையிலான, 100 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை அச்சிடும் ஒப்பந்தம், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டை வடிவமைப்பது, அச்சடிப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரூபாய் நோட்டில், சர்ச்சைக்குரிய வரைபடமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு, நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.