sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு மதுவை எதிர்த்து போராடியது ஏன்? திருமாவை கேட்கிறார் சீமான்

/

திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு மதுவை எதிர்த்து போராடியது ஏன்? திருமாவை கேட்கிறார் சீமான்

திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு மதுவை எதிர்த்து போராடியது ஏன்? திருமாவை கேட்கிறார் சீமான்

திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு மதுவை எதிர்த்து போராடியது ஏன்? திருமாவை கேட்கிறார் சீமான்

23


UPDATED : நவ 06, 2025 10:40 PM

ADDED : நவ 06, 2025 02:36 PM

Google News

23

UPDATED : நவ 06, 2025 10:40 PM ADDED : நவ 06, 2025 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. மதுக்கடையை திறந்து வைத்து நடத்தும் கட்சியோடு கூட்டணி வைக்கும் போது, விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பயன் ஏதாவது இருக்கா?,' என்று திருமாவளவனுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது; முத்துராமலிங்கத் தேவர் அரசியலை வியாபாரமாக்கக் கூடாது. கொள்கையற்ற அரசியலை பாவம் என்றார். ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அந்தக் காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவன் தேசத்துரோகி என்று சொல்கிறார். மதிப்புமிக்க உரிமைகளை ரொட்டித்துண்டுகளாக விற்பது அவமானகரமானது என்று அம்பேத்கர் கூறினார். தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பனை செய்வார்களா என்று அண்ணாதுரை சொன்னார். அவர் காலத்தில் காங்கிரஸ் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது.

ஓட்டுக்குப் பணம்


ஊடகங்களுக்கு தான் பெரிய பொறுப்பும், பங்கும் இருக்கிறது. காசு கொடுக்கும் இந்த முறையை மாண்புமிக்க ஜனநாயகத்தை, இந்தக் கேடுகட்ட பணநாயகமாக மாற்றி இருக்கும் முறையை நீங்கள் சாட வேண்டும். தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்வதில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம், ஓராண்டு சிறை என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்கிறார்கள்.

இதுவரையில் ஒரு வழக்காவது பதிவு செய்துள்ளார்களா? பறக்கும் படையினர் தொகுதிகளில் அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை பிடித்துள்ளது என்ற செய்தியை பார்த்துள்ளீர்களா? சாலைகளில் நின்று கொண்டு, மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்பவர், திருமணத்திற்கு வங்கிகளில் இருந்து பணம் எடுத்து செல்பவர்களைத் தான் தொடர்ச்சியாக பிடித்து வருகிறது. இது பறக்கும் படையல்ல, படுபாதக படையாக இருக்கிறது. இதை யாரும் கேட்பதில்லை.

ஒரு சட்டசபை தொகுதிக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி முதலீடு செய்கிறார் என்றால், அதிகாரத்திற்கு வந்தால், அதனை ஈட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் முதலீடு செய்கிறார். பணம் முதலீடு செய்து, மக்களுக்கு நல்லது செய்ய யாராவது வருகிறார்களா? ஒரு ரூபாய் காசு வாங்காமல், எங்களுக்கு 36 லட்சம் ஓட்டு போட்ட மக்கள் போற்றத்தக்கவர்கள். கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை இருக்கிறதா? என்று கேட்டு பாருங்கள். ஜெ., ஆட்சியின் போது கேரளாவில் அதிமுக போட்டியிட்ட போது, அங்குள்ள வாக்காளர்களுக்கு காசு கொடுக்கும் போது, அவர்களை மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைப் பார்த்து மக்கள் மாற வேண்டும்.

ஆட்சியின் சாதனையை சொல்லி ஓட்டு கேட்க வேண்டியது தானா? அப்புறம் எதுக்கு டிபன் பாக்ஸ், அண்டா எல்லாம் கொடுக்குறீர்கள்.

என்ன பயன்?


கூட்டணி எனக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் கட்சிகளின் கொள்கை, ஆட்சி, ஆட்சிமுறையை பிடிக்காமல் தான், இந்தக் கட்சியை தொடங்கினேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தினர். மதுவை யார் ஒழிக்க வேண்டும். அரசும், அரசு சம்பந்தப்பட்டவர்கள். மதுக்கடையை திறந்து வைத்து நடத்தும் கட்சியோடு கூட்டணி வைக்கும் போது, விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பயன் ஏதாவது இருக்கா?

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமகவின் ராமதாஸ் நீண்ட காலமாக கூறி வருகிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துபவருடன் தான் கூட்டணி, மதுவை ஒழிப்பவருடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி இது நடக்காத போது, மது ஒழிப்பு மாநாடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டங்கள் பயனற்று போய் விடும். அவன் எவ்வளவு பேசினாலும், இங்க தான் வருவான் என்ற எண்ணம் தான் உருவாகும். அதனால் தான் நாங்களாவது தனியாக நிற்கிறோம்.

ஊழல், லஞ்சம் மற்றும் மதுவை ஒழிக்க வேண்டும். கனிம வளங்களை காப்பாற்ற வேண்டும். இதற்காக, இப்ப இருக்கும் கட்சிகளில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம், நீங்களே சொல்லுங்கள். ஆட்சி மாற்றத்திற்கோ, ஆள் மாற்றத்திற்கோ வந்தவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சி முறை மாற்றத்திற்காக வந்தவர்கள் நாங்கள். விஜயகாந்த் 10.5 சதவீதம் ஓட்டு வைத்திருந்தார். இப்போது, கூட்டணி வைத்ததால் அது குறைந்து போய் விட்டது. அந்தத் தவறை நான் செய்யவில்லை. மெதுவாக மெதுவாக வருவோம். உறுதியாக வெல்லுவோம்.

கோட்பாடு


ஒரு கட்சி, மற்றொரு கட்சிக்கு எப்படி போட்டியாகும். எதிர்எதிர் கோட்பாடுகளைக் கொண்ட கட்சிகள் தான் போட்டியைக் கொண்டிருக்க முடியும். இவங்க எல்லாரும் ஈ.வெ.ரா., இல்லாமல் இங்கு ஒன்றுமே இல்லை என்கிறார்கள். ஆனால், நாங்கள் ஈ.வெ.ரா.,வால் எங்களுக்கு ஒன்றுமே இல்லை என்கிறோம். அவர்கள் திராவிடம் என்கிறார்கள். நாங்கள் தமிழர்கள் என்கிறோம். அவர்கள் லஞ்சம், ஊழலில் திளைத்து இருக்கிறார்கள். நாங்கள் உண்மை, நேர்மை பக்கம் நிற்கிறோம் என்கிறோம். இந்த மாறுபாட்டை தான் பார்க்க வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் விற்பனைக்கு தடை விதிப்பேன். என் மண்ணை கெடுக்கும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பேன். எதுவுமே தெரியாமல் வந்து நாட்டை ஆள வேண்டும். யாராவது சாராயத்திற்கு வீரன் என்று பெயர் வைக்கும் தலைவர் ஒருவன் உலகில் இருக்கிறார்களா? அப்போ, நான் மேடையில் பூலித்தேவன், தீரன்சின்னமலை, மருது பாண்டியன், வேலுநாச்சியர் என்று பேசுகிறேன் என்றால், நான் பைத்தியக்காரனா? நீ பைத்தியக்காரனா?

சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் பெயர் எல்லாம் ஒரு ஆப் பாட்டிலுக்கு பெயர் வைத்துவிடுவீர்களா? அதிமுக, திமுக, பாஜ, காங்கிரஸ் கட்சிகளின் கொடிகளின் வண்ணம் மாறும் எண்ணம் மாறாது.

மக்களின் முடிவு



இங்கு ஆள்பவன் என்னுடைய ரத்தத்தையும், இனத்தையும் சேர்ந்தவனா? அவனுக்கு என் மொழி செத்தால் எதுக்கு கவலை இருக்கா? நிலம் பறிபோனா கவலை இருக்கா?

தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை கேட்டு போராடுகிறேன். என்னை பாசிஸ்ட் என்று சொல்லும் நீதான் பாசிஸ்ட். கூட்டணி வைக்காமல் எப்படி ஜெயிக்க முடியாது என்று சொல்கிறீர்கள். நான் தனித்து நின்று வெற்றி பெற்று காட்டுவேன். அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும் அவ்வளவு தான். உங்களால் முடியாது. யாராலும் முடியாது என்று சொல்லாதீர்கள். திமுகவை ஒழிக்க வேண்டும் என்று அதிமுக முடிவு செய்யக் கூடாது. பாஜவை முடிக்க வேண்டும் என்று திமுக முடிவு செய்யக் கூடாது. மக்கள் முடிவு செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us