பாகிஸ்தான் முழுதும் பரவுகிறது ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்
பாகிஸ்தான் முழுதும் பரவுகிறது ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்
ADDED : அக் 04, 2025 01:06 AM

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இந்தப் போராட்டம் நாடு முழுதும் பரவியுள்ளது.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது உட்பட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ் மீரின் தலைநகர் முசாபராபாதில், அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில் இந்த போராட்டம் துவங்கியது.
இதையடுத்து முசாபராபாத், தத்யா, ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேரணி மற்றும் போராட்டத்தைத் தடுக்க போலீசார் ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி மக்கள் பேரணி சென்றனர்.
இதனால் போராட்டக்காரர்களை கலைக்க பாக்., ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இவற்றில், 12 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசார் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த போராட்டம், நாடு முழுதும் பல இடங்களுக்கு பரவியுள்ளது.
பாக்., அரசு சொந்த நாட்டு மக்களையே வேட்டையாடுவதாகக் கூறி, கராச்சியில் நுாற்றுக் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாதில் வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அங்குள்ள பிரஸ் கிளப் அருகே அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மேலும், பிரஸ் கிளப்பில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.