ஒலிம்பிக் மல்யுத்தம்: பைனலுக்கு முன்னேறினார் வினேஷ் போகத்
ஒலிம்பிக் மல்யுத்தம்: பைனலுக்கு முன்னேறினார் வினேஷ் போகத்
UPDATED : ஆக 07, 2024 12:32 AM
ADDED : ஆக 06, 2024 03:14 PM

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆனார் வினேஷ் போகத். இவர் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவு போட்டி நடந்தது. வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் இந்தியாவின் வினேஷ் போகத், முதன் முறையாக இப்பிரிவில் பங்கேற்றார். முதல் சுற்றில் நடப்பு ஒலிம்பிக், நான்கு முறை உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.
முதல் 3 நிமிட 'பீரியடில்' வினேஷ் 0-1 என பின் தங்கினார். இரண்டாவது 'பீரியடிலும்' இவர் 0-2 என்ற நிலைக்கு சென்றார். போட்டி முடிய 9 வினாடி இருந்த போது, சிறப்பாக செயல்பட்ட வினேஷ், சுசாகியை கீழே தள்ள 2 புள்ளி கிடைத்தது. இதை எதிர்த்து சுசாகி அப்பீல் செய்த போதும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் வினேஷ் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச அரங்கில் சுசாகியின் முதல் தோல்வியாக இது அமைந்தது.
இதில் ஐரோப்பிய சாம்பியன், 2018 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற உக்ரைனின் ஆக்சனா லிவாச்சை சந்தித்தார். துவக்கத்தில் 4-0 என வினேஷ் முன்னிலை வகித்தார். பின் ஒரு கட்டத்தில் 5-4 என்ற நிலைக்கு சென்றார். போட்டி முடிய 48 வினாடி மீதம் இருந்த போது, வினேஷ் கூடுதலாக 2 புள்ளி எடுத்தார். முடிவில் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக் அரங்கில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதில் கியூபாவின் லோபசை 5-0 என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் வினேஷ் போகத்.