ADDED : பிப் 01, 2026 12:08 AM
டெஹ்ரான்: ஈரானில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடி விபத்தில் அக்கட்டடத்தின் இரண்டு தளங்கள் சேதமடைந்ததில், ஒருவர் பலியானார்; 14 பேர் காயமடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு துறைமுக நகரமான பந்தர் அப்பாசில் நேற்று எட்டு மாடி குடியிருப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அக்கட்டடத்தின் இரு தளங்கள் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த வாகனங்கள், கடைகளும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி அதிகரிக்கக்கூடும் என, அஞ்சப்படுகிறது.
வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது.
எரிவாயு கசிவால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தற்செயலாக நடந்ததா அல்லது சதி வேலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

