'பேஜர்' வெடித்த விவகாரம் கேரள வாலிபருக்கு வாரன்ட்
'பேஜர்' வெடித்த விவகாரம் கேரள வாலிபருக்கு வாரன்ட்
UPDATED : அக் 01, 2024 07:45 PM
ADDED : அக் 01, 2024 01:13 AM

ஓஸ்லோ: லெபனானில், பேஜர் கருவிகள் வெடித்து சிதறி, 30 பேர் உயிர் இழந்த விவகாரத்தில், கேரள தொழிலதிபர் ரின்சன் ஜோசுக்கு எதிராக சர்வதேச வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தும், மின்னணு தகவல் பரிமாற்ற சாதனமான, 'பேஜர்' கருவிகளை குறிவைத்து, இஸ்ரேலின் உளவு அமைப்பான, 'மொசாட்' சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.
இதில், 30 பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் காயம்அடைந்தனர். இந்த பேஜர் கருவிகளை, பல்கேரியாவைச் சேர்ந்த நோர்டா குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.
இந்நிறுவனம், கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ், 39, என்ற இளம் தொழிலதிபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. நார்வேயில் வசிக்கும் இவர், அந்நாட்டு குடியுரிமையும் பெற்றுள்ளார்.
'ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் பேஜர் கருவிகள் வெடித்த சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை' என, ரின்சன் ஜோஸ் திட்டவட்டமாக மறுத்தார். வேலை நிமித்தமாக கடந்த வாரம் அமெரிக்கா சென்ற அவர், திடீரென காணாமல் போனார்.
இந்நிலையில், மாயமான ரின்சன் ஜோஸ் மீது நேற்று வழக்குப் பதிவு செய்த நார்வே போலீசார், அவருக்கு எதிராக சர்வதேச வாரன்ட் பிறப்பித்தனர். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுஉள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.