அது எப்படி பேஜர் வெடிக்கும்; உலகை அதிர வைத்த 'சம்பவம்' செய்தது யார்; வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!
அது எப்படி பேஜர் வெடிக்கும்; உலகை அதிர வைத்த 'சம்பவம்' செய்தது யார்; வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!
ADDED : செப் 18, 2024 09:16 AM

புதுடில்லி: லெபனான் நாட்டில் பேஜர்கள் வெடித்த சம்பவம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.லெபனான் நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு வந்த பேஜர்களை முன்கூட்டியே வழிமறித்து, பார்சல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பு கைப்பற்றி விட்டது. பேஜர்களின் உள்ளே வெடிபொருளை வைத்து, மெசேஜ் வந்தால் வெடிக்கும் வகையில் செய்திருக்கிறது. இது எல்லாம் ஐந்து மாதங்களுக்கு முன் நடந்துள்ளது.அந்த பேஜர் பார்சல்கள், ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்து, அவர்களும் வெடிபொருள் இருப்பது தெரியாமலேயே பயன்படுத்தி வந்துள்ளனர். இஸ்ரேலிய உளவு அமைப்பினர் குறித்த நேரத்தில் மெசேஜ் அனுப்பி அவற்றை நேற்று வெடிக்க வைத்து விட்டனர்.இப்படி பேஜர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது உலகில் இதுவே முதல் முறை என்பதால், ஒட்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பேஜர்கள் என்றால் என்ன?
* 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களில் பிரபலமானது பேஜர்கள். இது கம்பில்லா தொலைத்தொடர்பு சாதனங்களாகும். ஒரு வழிப்பாதை தகவல் தொடர்புக்கு வசதியானவை. மெசேஜ் பெறுபவர் பதில் அனுப்ப முடியாது. இந்தியாவிலும், 20ம் நுாற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் இவை புழக்கத்தில் இருந்தன. காலப்போக்கில் சந்தையில் இருந்து காணாமல் போய் விட்டன.
* மொபைல் போன் அதிநவீன வளர்ச்சிகள், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட அடுத்தடுத்து மாற்றங்கள் வந்ததும் பேஜர்கள் உபயோகம் நின்று விட்டது.
பேஜர்கள் எவ்வாறு செயல்படுகிறது?
* அதிநவீன சாதனங்கள் வந்தாலும் சில முக்கிய பகுதியில் பேஜர்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அவற்றின் தனித்துவமான நன்மைகள் தான் காரணம். இதனை உபயோகப்படுத்துவது நம்பகத்தன்மைக்காக கருதப்படுகிறது.
* பேஜர்களில் உள்ள பேட்டரிகளுக்கு ஆயுள் காலம் அதிகம். இதனால், சிக்னல்கள் கிடைக்காத பகுதிகளில், மருத்துவமனைகளுக்குள் உபயோகப்படுத்தப்படுகிறது.
* ஒரு முறை சார்ஜ் போட்டால், ஒரு வாரம் கூட பயன்படுத்தலாம். பேஜர்கள் மூலம் தொடர்புகொள்வது மிகவும் பாதுகாப்பானதாகவும் தனிப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
* எடுத்துக்காட்டாக, சுகாதாரப் பராமரிப்பில், மருத்துவச் சாதனங்களில் குறுக்கிடும் அபாயம் காரணமாக செல்போன்களைப் பயன்படுத்த முடியாத சூழலில் விரைவாகத் தொடர்பு கொள்ள வேண்டிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு பேஜர்கள் இன்றியமையாததாகவே இருக்கும்.
* போலீசார் மற்றும் தீயணைப்புத் துறைகள் உள்ளிட்ட அவசரச் சேவைகளும் உடனடி விழிப்பூட்டல்களுக்கு பேஜர்களை நம்பியிருக்கின்றன.