போலீஸ் வாகனம் மீது ராக்கெட் தாக்குதல்: பாகிஸ்தானில் 11 பேர் பரிதாப பலி
போலீஸ் வாகனம் மீது ராக்கெட் தாக்குதல்: பாகிஸ்தானில் 11 பேர் பரிதாப பலி
ADDED : ஆக 23, 2024 08:35 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளால் தாக்கியதில், 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமுற்றனர்.
பாகிஸ்தானில் லாகூர் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரஹீம் கான் என்ற இடத்தில் இரண்டு போலீஸ் வாகனங்கள் சேறும், சகதியுமான சாலையில் சிக்கி கொண்டது. அப்போது அந்த பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் சென்ற ஒரு கும்பல், போலீஸ் வாகனம் மீது ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 11 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமுற்றனர்.
உயிரிழப்பு அதிகரிக்கலாம்
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு பிறகு, அந்த கும்பல் தப்பியோடினர். தப்பிய கும்பல், போலீசாரில் சிலரை பிணைக்கைதிகளாகவும் பிடித்து சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் கொள்ளையர்களா, ஏதேனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களா என்ற விவரம் வெளியாகவில்லை.
நடவடிக்கை
பாகிஸ்தானில் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அவை, அவ்வப்போது போலீஸ், ராணுவத்தை தாக்குவதும், பிணைக்கைதிகளாக பிடிப்பதும் வழக்கம். பிணைக்கைதிகளை மீட்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் உத்தரவிட்டார்.