பாக்., ராணுவ தலைமையிடங்களில் பதுங்கிய பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ், சலாவுதீன்
பாக்., ராணுவ தலைமையிடங்களில் பதுங்கிய பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ், சலாவுதீன்
UPDATED : மே 09, 2025 07:20 AM
ADDED : மே 08, 2025 03:16 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முக்கிய பயங்கரவாதிகள் 3 பேருக்கு ராணுவ தலைமையிடத்தில் பதுங்கி கொள்ள பாகிஸ்தான் ராணுவம் அனுமதித்துள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தின் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாத தலைவர்களும் வெளிப்படையாக ஒன்றிணைந்துள்ளனர். கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, பாகிஸ்தான் ராணுவம் மூன்று முக்கிய பயங்கரவாத தலைவர்கள் உட்பட சில பெரிய பயங்கரவாதிகளை அதன் நான்கு தலைமையகங்களுக்கு மாற்றியுள்ளது. ஏனைய பயங்கரவாதிகள் தற்போதைக்கு மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ராணுவ புகலிடங்கள் எது ?
பயங்கரவாதத்தின் மூன்று பெரிய முகங்களான மசூத் அசார்(ஜெய்சி இ முகம்மது ), ஹபீஸ் சயீத் (ஜமாத் உத்தவா) , சையத் சலாவுதீன் உட்பட பல பெரிய பயங்கரவாத தளபதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் நான்கு வெவ்வேறு தலைமையகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உளவுத்துறை வட்டாரங்களின்படி, மேற்கூறிய 3 பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் ராணுவத்தின் லாகூரில் உள்ள 4வது படைப்பிரிவு, கராச்சியில் உள்ள 5வது படைப்பிரிவு, ராவல்பிண்டியில் உள்ள 10வது படைப்பிரிவு, பெஷாவரில் உள்ள 11வது படைப்பிரிவு தலைமையகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தலைவர்களின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைக்கு, பொது மக்களும் அவர்களை சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

