பாக்.,கில் கூட்டணி ஆட்சி? : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை
பாக்.,கில் கூட்டணி ஆட்சி? : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை
ADDED : பிப் 11, 2024 02:25 AM

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பொது தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பேச்சு நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களும் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றனர்.
, பாகிஸ்தானில் மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
மீதியுள்ள இடங்களில், 60 பெண்களுக்கும், 10 அந்நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 265 இடங்களுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. அன்றே ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. மொத்தமுள்ள 265 இடங்களில், 255 தொகுதிகளின் முடிவு கள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மை
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள், 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
நவாஸ் ஷெரீப் கட்சி 73 இடங்களையும், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் வென்றுள்ளன.
முத்தாஹிதா கவுமி இயக்கம் 17 இடங்களை கைப்பற்றியுள்ளது. மீதி உள்ள இடங்களை சிறிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. இருப்பினும், இம்ரான் கான் ஆதரவாளர்களும், நவாஷ் ஷெரீபும் தாங்கள்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.
ஆட்சி அமைக்க 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாக்., மக்கள் கட்சியுடன், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு நடத்தி வருகிறார்.
நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட இரு கட்சி நிர்வாகி களும் இது தொடர்பாக சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இருப்பினும், இது குறித்து இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என பாக்., மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் சிக்கலான தேர்தல் முறையின் படி, சுயேட்சை உறுப்பினர்கள் தாங்களாகவே அரசை அமைக்க முடியாது. ஆனால், தேர்தலுக்குப் பின் அவர்கள் எந்தக் கட்சியிலும் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால், வெற்றி பெற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சை, சுயேச்சையாக வெற்றி பெற்ற இம்ரானின் ஆதரவாளர்கள் துவங்கி உள்ளனர்.
தேர்தல் நடந்த 265 தொகுதிகளில், 255 இடங்களுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான முடிவு கள் அறிவிக்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, இம்ரான் கான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரானுக்கு ஜாமின்
ஊழல் வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு மே 9ல், பொதுச் சொத்துக்கள் மீது, அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் அவருக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
இருப்பினும், ஊழல் உள்ளிட்ட வேறு சில வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

