உண்மையில் " அலறுது " பாகிஸ்தான்.. முக்கிய நகரங்களில் அபாய ஒலி கருவி
உண்மையில் " அலறுது " பாகிஸ்தான்.. முக்கிய நகரங்களில் அபாய ஒலி கருவி
UPDATED : மே 02, 2025 11:43 AM
ADDED : மே 02, 2025 11:37 AM

இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகர் பகுதிகளில் அபாய குரல் எழுப்பும் கருவிகளை உயர் கம்பங்களின் உச்சியில் நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த இந்துக்கள் படுகொலைக்குப் பிறகு இந்தியாவின் கோபத்தைக் கண்டு பாகிஸ்தான் ராணுவம் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் தனது ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று பாக்., தளபதி ஹசீம் முனீர் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவம் போருக்குத் தயாராக இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் பாக்., படையில் ராஜினாமாக்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்துக்கள் படுகொலைக்குப் பிறகு, அசிம் முனீர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வெளிநாடு தப்பிச் சென்றதாக செய்திகள் வந்தன. ஆனாலும் இது தவறான தகவல் என தெரிந்தது.
இந்திய எல்லைக்கு அருகிலுள்ள தில்லா பீல்ட் பயரிங் ரேஞ்சில் பாகிஸ்தான் தற்போது ராணுவம் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தவிர, பாகிஸ்தான் விமானப்படை மற்றும் கடற்படையும் தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதைக் காட்ட தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தில்லா துப்பாக்கிச் சூடு தளத்திற்கு சென்ற அசிம் முனீர், பாகிஸ்தான் ராணுவத்தை 'தேசத்தின் பாதுகாப்பின் சின்னம்' என்று புகழ்ந்தார்.
போர்சூழலில் பல வீரர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதற்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இதில் ராணுவ வீரர்களும் போலீசாரும் குறிவைக்கப்படுகிறார்கள். இதன் காரணமாகவும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா (கேபிகே) மாகாண அரசாங்கம், பெஷாவர் மற்றும் அபோட்டாபாத் உட்பட 29 மாவட்டங்களில் அபாய குரல் எழுப்பும் சைரன் கருவிகளை நிறுவ உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஜளர் பகுதியில் ஏர் சைரன்கள் பொருத்தப்பட்டிருக்கும் படங்களும் வெளியாகின. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 500 கி மீட்டர் தொலைவு வரை பகுதிகளிலும், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பகுதிகளிலும் பாகிஸ்தான் விமான சைரன்களை நிறுவி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் ஆதரவு
இதற்குக் காரணம், ஆப்கானிஸ்தானின் ஆதரவுடன் இந்தியா பாகிஸ்தானைத் தாக்கக்கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுவதாக கூறப்படுகிறது. பஹல்காம் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா எந்த நேரத்திலும் பதிலடி ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது. அங்கு சைரன்கள் பொருத்தப்படுவது பாகிஸ்தானின் போர் அச்சத்தை தெளிவாக காட்டுகிறது.