இந்தியா போர் தொடுத்தால் இங்கிலாந்துக்கு பறந்துவிடுவேன்; சொல்கிறார் பாகிஸ்தான் எம்.பி.,
இந்தியா போர் தொடுத்தால் இங்கிலாந்துக்கு பறந்துவிடுவேன்; சொல்கிறார் பாகிஸ்தான் எம்.பி.,
ADDED : மே 04, 2025 08:02 PM

புதுடில்லி: பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், இங்கிலாந்துக்கு சென்று விடுவேன் என்று பாகிஸ்தான் இம்ரான் கான் கட்சி எம்.பி., கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியா, எந்த நேரம் வேண்டுமானாலும், பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியிருக்கையில், நாங்களும் போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தானும் கூறி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பி.டி.ஐ., கட்சி எம்.பி., ஷேர் அப்ஷல் கான் மார்வத் வெளிப்படையாக கூறியிருப்பது அந்நாட்டினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
'ஒருவேளை பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், நான் இங்கிலாந்துக்கு சென்று விடுவேன்,' என்று அவர் கூறினார். அவரது இந்தப் பேச்சு கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், 'பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் மக்களுக்கு, அந்நாட்டு ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஒருவேளை போர் ஏற்பட்டால், வெளிநாடுகளுக்கு செல்ல பாகிஸ்தான் அமைச்சர்களும், அவரது குடும்பத்தினரும் ஏற்கனவே விமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து விட்டனர்.
இந்தியாவின் ராணுவ வலிமையை எதிர்த்து பாகிஸ்தானால் எதிர்த்து போராட முடியாது என்பது ஒருமித்த கருத்தாகும். பாகிஸ்தான் மக்களும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் மக்களும், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை கொடுக்கும் என்று நினைக்கின்றனர்,' எனக் கூறினார்

