பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கடத்திய பாகிஸ்தானியருக்கு 40 ஆண்டு சிறை
பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கடத்திய பாகிஸ்தானியருக்கு 40 ஆண்டு சிறை
ADDED : நவ 06, 2025 12:16 AM
நியூயார்க்: ஹவுதி பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களை கடத்தியதாக அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானியருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் -மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே, இரண்டு ஆண்டுகள் போர் நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
போரின் போது, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, மற்றொரு மேற்காசிய நாடான ஈரானின் ஆதரவு பெற்ற, ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாதிகளும், இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்க ராணுவக் கப்பல்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அமெரிக்க கடற்படையும் சந்தேகத்திற்குரிய கப்பல்களில் சோதனை நடத்தி வந்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரியில், சோமாலியா கடற்கரை அருகே சிறு படகு ஒன்றை அமெரிக்க கடற்படை வீரர்கள் சோதனையிட்டனர்.
படகில் இருந்த 14 மாலுமிகளில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது பஹ்லவானும் ஒருவர்.
சோதனையின்போது, ஈரானில் தயாரித்த மேம்பட்ட ஆயுதங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை உதிரி பாகங்கள் சிக்கின.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் இணைந்து பஹ்லவான், ஹவுதி பயங்கரவாதிகளுக்காக இந்த ஆயுதங்களை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது பஹ்லவானை, குற்றவாளி என அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அவருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

