சீனா ஏவுதளத்தில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகிஸ்தானின் செயற்கைக்கோள்
சீனா ஏவுதளத்தில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகிஸ்தானின் செயற்கைக்கோள்
ADDED : ஏப் 26, 2026 05:49 PM

பீஜிங்: பாகிஸ்தானுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று சீனாவின் ஏவுதளத்தில் இருந்து ஏப்ரல் 25 ல் ஏவப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் 'பி.ஆர்.எஸ்.சி., - இ.ஓ., - 3' என்று பெயரிடப்பட்ட செயற்கைக்கோள், வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று முன்தினம் ஏவப்பட்டது. 'லாங் மார்ச் - 6' என்ற ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள், திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்தாண்டு மூன்று பாகிஸ்தான் செயற்கைக்கோள்களை சீனா ஏவியிருந்த நிலையில், இது நான்காவது செயற்கைக்கோளாகும். இதன் வாயிலாக பாகிஸ்தானுடனான தன் நட்புறவை விண்வெளித்துறைக்கும் சீனா விரிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையே, சீனாவின் விண்வெளி பயண பயிற்சியில் பங்கேற்பதற்காக சீனாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பாகிஸ்தானியர்கள் சமீபத்தில் சீனா வந்தடைந்துள்ளதாகவும், அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
