பிலிப்பைன்ஸ் எரிமலை சீற்றம்; ஆபத்தான இடத்தில் வசித்த 3,000 பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸ் எரிமலை சீற்றம்; ஆபத்தான இடத்தில் வசித்த 3,000 பேர் வெளியேற்றம்
ADDED : ஜன 08, 2026 09:56 PM

மணிலா: பிலிப்பைன்சில் செயல்பாட்டில் இருக்கும் மயோன் எரிமலையில் திடீர் சீற்றம் ஏற்பட்டதால், ஆபத்து மண்டலத்தில் வசிக்கும் கிராம மக்கள் 3,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை, உலக அளவில் மிக அழகிய கூம்பு வடிவ எரிமலையாக கருதப்படுகிறது. ஆனால், இது பிலிப்பைன்சின் 22 செயல்பாட்டு எரிமலைகளில் மிகவும் ஆக்ரோஷமான ஒன்றாக உள்ளது.
கடந்த, 400 ஆண்டுகளில், 50 முறைக்கு மேல் வெடித்துள்ள இந்த எரிமலை, தற்போது மீண்டும் சீற்றம் காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக எரிமலை உச்சியில் இருந்து பாறை உருண்டைகள் விழுவதும், சிறிய அளவிலான வெடிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் எரிமலையைச் சுற்றி 6 கி.மீ., சுற்றளவு ஆபத்து மண்டலத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.கிராம மக்கள் 3,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

