மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி; கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு
மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி; கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு
ADDED : ஜூலை 25, 2025 10:51 AM

மாலே: மாலத்தீவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்று உள்ளார். அங்கு அவருக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து மோடி பேசினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஸ்டாமர் முன்னிலையில், இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையழுத்தானது. பிரிட்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு இன்று (ஜூலை 25) பிரதமர் மோடி மாலத்தீவு சென்று அடைந்தார்.
விமான நிலையத்தில், பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். கலைநிகழ்ச்சிகளை மோடி உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தார்.
60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அவர், அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

