சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி: விமான நிலையம் வந்து வரவேற்றார் அதிபர்
சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி: விமான நிலையம் வந்து வரவேற்றார் அதிபர்
ADDED : ஜூன் 15, 2025 07:02 PM

லிமாசோல்: சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து அந்நாட்டு அதிபர் வரவேற்றார். அங்குள்ள இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. நடப்பாண்டிற்கான, 'ஜி - 7' நாடுகளின் உச்சி மாநாடு வட அமெரிக்க நாடான கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதல் பயணமாக சைப்ரஸ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் வந்த சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு, பிரதமர் மோடியை வரவேற்று அழைத்துச் சென்றார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: சைப்ரசில் தரையிறங்கினேன். விமான நிலையம் வந்து என்னை வரவேற்று சிறப்புற செய்த சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசுக்கு நன்றி. இந்த பயணம் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கும் எனக்கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை பார்க்க, இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் ஒன்று கூடினர். அவர்களை நோக்கி கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், 'பாரத் மாதா கி ஜே ' எனறு கூறினார். அங்கிருந்தவர்களும் உற்சாகமாக அதனை திரும்ப கூறினர்.