ரஷ்ய அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி: இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை
ரஷ்ய அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி: இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை
UPDATED : அக் 22, 2024 10:11 PM
ADDED : அக் 22, 2024 05:08 PM

கஜன்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ரஷ்யா, இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் யு.ஏ.இ., ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, ரஷ்யாவின் கஜன் நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, அதிபர் புடின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நகருக்கு சென்றார். விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் புடினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
முக்கிய முடிவுகள்
அப்போது புடின் பேசுகையில், கடந்த ஜூலை மாதம் நாம் இருவரும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். பல முறை தொலைபேசி வாயிலாகவும் பேசி உள்ளோம். எனது அழைப்பை ஏற்று இங்கு வந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்று பிரிக்ஸ் மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொள்கிறோம். பிறகு, விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறோம். பிரிக்ஸ் மாநாட்டில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுப்போம். இவ்வாறு புடின் பேசினார்.
பெருமை
பிரதமர் மோடி பேசியதாவது: உங்களது நட்பு, சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் மாநாட்டிற்காக கஜன் போன்ற அழகான நகருக்கு வர எனக்கு கிடைத்த வாய்ப்பு பெருமை அளிக்கிறது. இந்த நகருடன் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியில் ஆழமான உறவு உள்ளது. இங்கு புதிய தூதரக அலுவலகம் திறந்தது மூலம் நமது உறவு இன்னும் வலுப்படும். இவ்வாறு மோடி பேசினார்.