உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு; முக்கிய ஆலோசனை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு; முக்கிய ஆலோசனை
UPDATED : ஆக 30, 2025 09:29 PM
ADDED : ஆக 30, 2025 09:22 PM

பீஜிங்: சீனா சென்றுள்ள பிரதமர் மோடி நாளை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் உரையாடினார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக சீனாவுக்கு சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி.
நடந்து வரும் மோதல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

