மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
UPDATED : ஏப் 05, 2025 02:03 PM
ADDED : ஏப் 05, 2025 01:26 PM

கொழும்பு: ''இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்'' என இலங்கை அதிபர் அநுராவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
கொழும்பு நகரில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் நெருக்கமான உறவுகள் உள்ளன.
மீனவர்களை விடுவிக்கணும்
இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும். இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
தமிழர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
10ஆயிரம் வீடுகள்
பயங்கரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்னையில் இலங்கை தவித்த போது இந்தியா துணை நின்றது. இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மூன்று கோவில்களை சீரமைக்க இந்தியா உதவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நிதி அளித்ததற்கு நன்றி
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேசியதாவது: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.