நெதர்லாந்தில் 4 மாதங்களுக்கு பின் பிரதமர் பதவியேற்பு; மோடி வாழ்த்து
நெதர்லாந்தில் 4 மாதங்களுக்கு பின் பிரதமர் பதவியேற்பு; மோடி வாழ்த்து
ADDED : பிப் 24, 2026 10:23 AM

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரும், ஓரினச்சேர்க்கை ஆதரவாளருமான ராப் ஜெட்டன், 38, பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 150 இடங்களில் பெரும்பான்மைக்கு 76 தேவை. இதில், ராப் ஜெட்டனின் ஜனநாயகக் கட்சி 26 இடங்களில் வென்றது.
தேர்தல் முடிந்து 117 நாட்கள் நீண்ட பேச்சுக்குப் பின், ராப் ஜெட்டன், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி மற்றும் சுதந்திரத்திற்கான மக்கள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார்.
ஆனால், இந்த கூட்டணி 66 இடங்களை மட்டுமே கொண்டுள்ளதால் சிறுபான்மை அரசாக உள்ளது. ஒவ்வொரு சட்டத்தையும் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி ஆதரவு திரட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஜெட்டனின் இளமை, தைரியம் நெதர்லாந்து அரசியலில் மாற்றத்தை கொண்டு வருமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நெதர்லாந்து புதிய பிரதமர் ராப் ஜெட்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நெதர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்ற ராப் ஜெட்டனுக்கு வாழ்த்துக்கள்.
இந்தியாவும் நெதர்லாந்தும் பல்வேறு துறைகளில் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. நமது இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்க உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

