UPDATED : செப் 22, 2024 07:32 PM
ADDED : செப் 22, 2024 01:13 PM

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஜேவிபி தலைவர் அனுரா திசநாயகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இடையே இழுபறி ஏற்பட்டது. இரண்டாம் விருப்ப ஓட்டுகள் எண்ணப்பட்டதன் முடிவில், அனுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னரே அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் அங்கிருந்து கிளம்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சுசாந்தா புன்சினிலமே நேற்று மதியம் அந்நாட்டு நேரப்படி 2:25 மணிக்கு சென்னை கிளம்பினார்.
ஒருங்கிணைந்த தேசிய கட்சி பொதுச்செயலர் பலிதா பங்காரா நேற்று இரவு 11:25 மணியளவில் தாய்லாந்துக்கு சென்றார்.
முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவின் மாமனார் மற்றும் சில உறவினர்களும் இலங்கையில் இருந்து கிளம்பி வெளிநாட்டிற்கு பறந்தனர்.
சில புத்தமத துறவிகளும் வெளிநாட்டிற்கு கிளம்பியதாக கூறப்படுகிறது. அனைவரும் கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பினர்.