மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் தவிக்கும் கியூபா மக்கள்
மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் தவிக்கும் கியூபா மக்கள்
ADDED : அக் 20, 2024 04:31 AM

ஹவானா: கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான லா ஆன்டனி குட்டோரஸ் சேதமடைந்ததை அடுத்து, நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
கரிபீயன் கடலில் உள்ள தீவு நாடான கியூபாவில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது.
பொருளாதார சரிவு உட்பட பல்வேறு காரணங்களால், மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து பணிகளும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும் செயல்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து, அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான லா ஆன்டனி குட்டோரஸ், தன் உற்பத்தியை நேற்று முன்தினம் நிறுத்தியது. இதையடுத்து, நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
சமீபத்தில் வீசிய மில்டன் சூறாவளி காரணமாக குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டதால், போக்குவரத்து சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயலிழந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின. இணையதள சேவையும் பாதிக்கப்பட்டதால், கியூபா மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.
பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் மூடப்பட்டுள்ளன. இரவில் செயல்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கலாசார மையங்களை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் ஹவானாவில் அனைத்து வர்த்தகங்களும் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டன. உணவு, எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மின் தடை அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக தடை, ஆலைகளை இயக்குவதற்கான எரிபொருள் மற்றும் உதிரி பாகங்களை பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவை உற்பத்தி பாதிப்புக்கு காரணம் என, கியூபா அரசு குற்றம்சாட்டியுள்ளது.